சினிமாவில் ஒரு நடிகரால் ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். பெரும்பாலும் இரட்டை வேடங்களில் நடிப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே இரண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதற்கு முன்னதாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
திரையுலகில் பல புதுமைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார் கமல்ஹாசன். அவருக்கு அடுத்ததாக அவரைப் போன்று அதிக வேடங்களில் நடித்து கவனம் பெற்றவர் விக்ரம். ஆனால், கமல்ஹாசன், விக்ரமை எல்லாம் தாண்டி ஒரு நடிகர், ஒரே படத்தில் 45 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறது. ஆம், அவர் தான் மலையாள நடிகர் ஜான்சன் ஜார்ஜ். இவர் தான் 45 கதாபாத்திரங்களை ஒரே படத்தில் கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்தப் படத்தின் பெயர் ’ஆரானு ஞான்’ (Aaranu Njan).
கடந்த 2018ஆம் ஆண்டு பி.ஆர்.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் ஜான்சன் ஜார்ஜ் இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு, அவர் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்தப் படத்தில் ஜான்சன் ஜார்ஜ், ”காந்தி, இயேசு, விவேகானந்தர், டாவின்சி என பல்வேறு கதாபாத்திரங்களில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார். இந்தப் படம் 1 மணி நேரம் 47 நிமிடங்கள் இருக்கும் நிலையில், 45 கதாபாத்திரங்களால் அசரடித்தார் ஜான்சன். இவரின் சாதனையை இன்று வரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை. நீங்கள் வித்தியாசமாகவும், அற்புதமாகவும் ஒரு படத்தை பார்க்க விரும்பினால் ‘ஆராணு ஞான்’ திரைப்படம் உங்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.