கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, அதில் இருந்து ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய விருப்பமாக உள்ளது. குறிப்பாக, ஓய்வுக்காலத்திற்குப் பிறகு கை செலவுக்கு பிறரை எதிர்பார்க்காமல் வாழ விரும்புவோருக்கு, தபால் நிலையங்கள் (Post Office) வழங்கும் சேமிப்புத் திட்டங்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. அந்த வகையில், தற்போது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ‘தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்’ (Post Office MIS) குறித்த முக்கியத் தகவல்களை இங்கே காண்போம்.
மத்திய அரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் இத்திட்டத்தில், ஒருமுறை குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை வட்டியாகப் பெற முடியும். தற்போது இத்திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, இது பல முன்னணி வங்கிகளின் சேமிப்புத் திட்டங்களை விட அதிகமாகும். இத்திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் தனி நபராகவோ அல்லது 3 பேர் வரை இணைந்த கூட்டுக் கணக்காகவோ (Joint Account) முதலீட்டைத் தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் பெயரிலும் பாதுகாவலர் மூலம் கணக்கை தொடங்கும் வசதி உள்ளது.
முதலீட்டு வரம்பைப் பொறுத்தவரை, ஒரு தனி நபர் தனது கணக்கில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். அதுவே கூட்டுக் கணக்காக இருந்தால், வரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். கணக்கை தொடங்கிய ஓராண்டு வரை பணத்தை திரும்பப் பெற முடியாது என்பதுடன், இடையில் பணத்தை எடுக்கும்போது சில நிபந்தனைகள் மற்றும் பிடித்தங்கள் பொருந்தும்.
இந்த திட்டத்தின் லாபத்தை ஒரு சிறிய கணக்கீடு மூலம் பார்த்தால், ஒரு தனி நபர் தனது கணக்கில் அதிகபட்ச தொகையான 9 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், அவருக்கு மாதந்தோறும் சுமார் 5,500 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இதுவே கூட்டுக் கணக்கில் 15 லட்சம் ரூபாயை முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 9,250 ரூபாய் வருமானமாக வந்து சேரும். 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, உங்களது அசல் தொகை முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது மீண்டும் அதே திட்டத்தில் முதலீடு செய்து வருவாயை தொடரலாம். சந்தை அபாயங்கள் இல்லாத பாதுகாப்பான முதலீட்டை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
Read More : பெண்களே..!! தொழில் தொடங்க விருப்பமா..? தமிழ்நாடு அரசு கொடுத்த செம வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!



