நாடு முழுவதும் கள்ளக்காதலும் அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.. அந்த வகையில் புனேவில் கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.. புனேவின் அம்பேகான் பகுதியில் 34 வயதான நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தான் பணிபுரியும் இடத்திற்கு அருகில் அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். குற்றவாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், அவர்களைக் காவல்துறை தேடி வருகிறது.
இந்தச் சம்பவம் டிசம்பர் 22 அன்று மாலை 6:45 மணியளவில் அம்பேகான் பகுதியில் உள்ள காயமுக் சௌக், குருதத்தா வாஷிங் சென்டர் அருகே நிகழ்ந்தது. உயிரிழந்தவர் நாந்தேட் மாவட்டம், போக்கர், சனி கோயில் அருகே உள்ள குவாஜநகரைச் சேர்ந்த ஜாவேத் கஜாமியா பதான் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தீப் ரங்கராவ் பூர்கே (25) மற்றும் அவரது நண்பர் மீது அம்பேகான் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை, உயிரிழந்தவரின் உறவினரான ரவுஃப் உஸ்மான் ஷேக் (35) என்பவர் அளித்துள்ளார். இவர் தற்போது புனே, நர்ஹே, பூம்கர் சௌக்கில் வசித்து வருகிறார்.. அவரின் சொந்த ஊர் போக்கர், குவாஜநகர் ஆகும்.
ஜாவேத் பதான் புகார்தாரரின் உறவினர் ஆவார். அவர் அம்பேகான் பகுதியில் உள்ள ஒரு வாஷிங் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அவர், முக்கிய குற்றவாளியான சந்தீப் பூர்கேயின் சகோதரியுடன் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சமீபத்தில் ஜாவேத் அந்த பெண்ணை அவர்களது சொந்த கிராமத்திலிருந்து புனேவுக்கு அழைத்து வந்ததாகவும், இது பூர்கேவை மேலும் கோபப்படுத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பூர்கே, அம்பேகானில் உள்ள ஜாவேத்தின் பணிபுரியும் இடம் பற்றித் தெரிந்துகொண்டார்.. மேலும், தனது நண்பருடன் சேர்ந்து அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஜாவேத்திற்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
மூத்த காவல் ஆய்வாளர் ஷரத் ஜினே இதுகுறித்து பேசிய போது “ சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தெரிவித்தார். ஜாவேத் ஆரம்பத்தில் அம்பேகானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் பின்னர் சசூன் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஜாவேத் அந்த வாஷிங் சென்டரில் பணிபுரிந்து வந்தார்; இருப்பினும், கடந்த ஒன்பது மாதங்களாக அவர் விடுப்பில் இருந்தார். டிசம்பர் 11 அன்று அந்தப் பெண்ணுடன் அவர் புனே திரும்பியதே இந்தத் தகராறுக்கு வழிவகுத்தது.” என்று தெரிவித்தார்..
குற்றவாளிகள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அம்பேகான் காவல் நிலையம் மற்றும் குற்றப்பிரிவிலிருந்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.



