திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுரா கண்டிகை பகுதியைச் சேர்ந்த முருகன்-ரேவதி தம்பதியின் மகள் கௌசல்யா (20). ஆசிரியர் பயிற்சி பெற்று வந்த இவருக்கும், அவரது முறை பையனான ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், மணவாழ்க்கை தொடங்கிய சில காலத்திலேயே கௌசல்யா மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த அன்று, ராஜேஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், கௌசல்யா வீட்டில் மயங்கி கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். ராஜேஷ் விரைந்து வந்து கதவை உடைத்து, சமையலறையில் மயங்கி கிடந்த மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தலையில் காயம் இருந்ததால், அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்றே ராஜேஷ் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், மகளின் உடலில் இருந்த நகக்கீறல்களும், காயங்களும் தந்தை முருகனுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பொன்னேரி போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நடத்திய தீவிர விசாரணையில், ராஜேஷ் முன்னுக்குப் பின் முரணான பதில்களை கூறினார். இறுதியாகப் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், தனது கள்ளக்காதலை தக்கவைத்துக் கொள்ள மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். ராஜேஷுக்கும், அவரது தங்கை முறை வரும் தீபிகா என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக தகாத உறவு இருந்து வந்துள்ளது.
திருமணம் முடிந்த பிறகும் தனது காதலியுடன் தனிமையில் பொழுதை கழித்து வந்த ராஜேஷுக்கு, கௌசல்யா ஒரு தடையாக இருந்துள்ளார். கௌசல்யா உயிருடன் இருந்தால் நாம் சேர்ந்து வாழ முடியாது, அவளை தீர்த்துக்கட்டு என தீபிகா கொடுத்த யோசனையே இந்தக் கொலைக்கு அடிப்படை என்பது அம்பலமானது.
அதன்படி, வேலைக்குச் செல்வது போல நாடகமாடிய ராஜேஷ், யாரும் பார்க்காத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த கௌசல்யாவை மூச்சுத் திணறடித்தும், கழுத்தை நெறித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அது ஒரு விபத்து போல தோற்றமளிக்க செய்ய, சமையலறையில் எண்ணெயை கொட்டி, கௌசல்யாவின் தலையைத் தரையில் மோதி காயத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், அந்த நகக்கீறல்களும் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையும் ராஜேஷுக்கு எதிராக திரும்பியது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Read More : 22 வயது இளம்பெண்ணை 20 மணி நேரம் சிறை வைத்து பாலியல் பலாத்காரம்..? பிரபல யூடியூபர் அதிரடி கைது..!!



