நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் அஜய் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவி நந்தினி (21) ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நந்தினி வழக்கம் போல் நேற்று திருச்செங்கோடு கல்லூரியில் இருந்து நாமக்கல்லுக்கு வந்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி, அஜய் தனது உறவினர்களுடன் காரில் காத்துக் கொண்டிருந்தார். நந்தினி காரில் ஏறும்போது, அங்கு வந்த அவரது தந்தை தண்டபாணி, மகள் காதலனுடன் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அப்போது, அஜய் மற்றும் அவரது உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, காருக்குள் சென்ற அஜய், தான் வைத்திருந்த தாலியை நந்தினி கழுத்தில் கட்டியுள்ளார். மேலும், இருவரும் மோதிரங்களையும் மாற்றிக்கொண்டனர். கண் முன்னே மகள் திருமணம் செய்துகொண்டதைக் கண்டு ஆத்திரமடைந்த தண்டபாணி மற்றும் அவரது உறவினர்கள், கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அப்போது, அஜய் உள்ளிட்டோரை தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், அஜய், நந்தினி உள்ளிட்ட 5 பேரையும் மீட்டு நாமக்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, காவல் ஆய்வாளர் கபிலன் விசாரணை நடத்தினார். நந்தினி, “அஜய்யை விருப்பத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, இரு தரப்பினரையும் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
Read More : பெரும் சோகம்..!! முன்னாள் முதல்வர் டி.டி.லாபாங் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!