திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு விழா, ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “ கேரள பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் முருகன் பூஜை செய்யப்படுகிறது. எனவே தற்போது நடைபெறும் திருப்பணிகள் கேரள முறைப்படி நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குடமுழுக்கு நடைபெறும் போது ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் மற்றும் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது ஆகம விதிகளுக்கு எதிரானது. கும்பாபிஷேகம் நடைபெறும் போது கருடன் வானத்தில் வட்டமிடும். ஹெலிகாப்டர் பயன்படுத்தினால் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது. இது பக்தர்களை பாதிக்கும். கேரள முறைப்படி திருப்பணிகள் நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து, அதன்பின்னரே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் அதுவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.என். சுப்பிரமணியம், மரிய கிளிட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மீண்டும் குழு அமைக்கக் கோருவது ஏற்புடையது அல்ல.. என்று கூறிய நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் இடைக்கால தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.