பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி கருத்துக்களையும், அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என்னுடைய தவறு என்றும் அவருக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டினார். அதேபோல், பாமக-வில் முகுந்தனை நியமித்தபோது, தாயார் மீது அன்புமணி பாட்டில் வீசித் தாக்கியதாகவும், பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, ”தான் கட்சியின் பொதுக்குழுவால் முறையாக தேர்வு செய்யப்பட்ட தலைவர். தன்னை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. தனக்கு பொறுப்புகள் வரும், போகும். கட்சி நிர்வாகிகள் மீதான அன்பு மட்டும் என்றும் போகாது. அடிமட்ட தொண்டனாக கூட செயல்பட நான் தயாராகத்தான் இருக்கிறேன்” என்று கூறினார்.
இதற்கிடையே, திலகபாமாவை பாமகவின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். ஆனால், பொருளாளர் பதவியில் திலகபாமாவே நீடிப்பார் என அன்புமணி அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வந்த நிலையில், கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும் அவருக்கு அதிகாரம் இல்லை. அவர் நீக்குவதாக கூறும் நிர்வாகிகள் தங்கள் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது தாயை தான் தாக்க முயன்றதாக தந்தை ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டு வேதனை அளிப்பதாக தெரிவித்த அன்புமணி, உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர் தனது தாய் தான் என்றும், அவர் மீது ஒரு துரும்பு கூட விழ அனுமதிக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார். தாய் குறித்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென அன்புமணி கண்கலங்கியதால், அவருக்கு நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
Read More : இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!! மாநிலங்களவைக்கு செல்கிறார் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்..?