பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு சையது மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி மீது அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வைத்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் கட்சிக்குள் குழப்பம் வெடித்துள்ளது. ராமதாஸுக்கு ஆதரவாக ஒருதரப்பும் அன்புமணிக்கு ஆதரவாக மறுதரப்பும் ஆதரவுக் கரம் நீட்டி வரும் நிலையில் உட்கட்சிப் பூசல் மேலும் வலுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே பாமக இளைஞரணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராமதாஸின் பேரன் முகுந்தன் அறிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளைச் சந்திக்க தலைவர் அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். அதன்படி கட்சியின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகளை மூன்று நாட்கள் சந்திக்கவுள்ள அவர், சென்னை சோழிங்கநல்லூரில் இன்று முதல் இந்தச் சந்திப்பை நடத்தி வருகிறார்.
அன்புமணியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாமக பொருளாளர் திலகபாமாவும் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அன்புமணியின் ஆதரவாளராக உள்ள திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே சமயம் அந்த பதவிக்கு சையது மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.