பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உடன் இருக்கும் “தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள்” விலகும் வரை அவருடன் சேர மாட்டேன் என்று கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி நேரடி சவால் விடுத்துள்ளார். அந்தக் ‘தீய சக்திகளின்’ பட்டியலை அன்புமணி கொடுத்தால், அதில் நானாக இருந்தாலும் கட்சியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன் என்று ஜி.கே. மணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சேலத்தில் அன்புமணி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த கட்சி நிர்வாகிகளை மருத்துவமனையில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி, உட்கட்சி மோதல்கள் குறித்து மிகுந்த வேதனை தெரிவித்தார். “பாமகவை சேர்ந்தவர்களே பாமகவினரை வீச்சருவாள், இரும்பு ராடு மற்றும் கற்கள் போன்ற ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
முக்கியக் குற்றவாளிகள் அன்று காரில் இருந்து இறங்கியிருந்தால், அங்கேயே பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என்று குற்றம் சாட்டினார். இது எவ்வளவு அவமானகரமான மற்றும் வேதனையான செயல் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், தாக்குதலில் காயமடைந்த நிர்வாகியான நடராஜ் என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக போலீசாரே தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க தவறினால், நிலைமை மேலும் மோசமடையும் என்றும் ஜி.கே. மணி எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அன்புமணி ராமதாஸ் கூறிய அந்த தீய சக்திகள் யார் என்று பட்டியல் கொடுத்தால், நானாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதன் பிறகுமாவது மருத்துவர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் சந்தித்து, கட்சிப் பிளவை நீக்கி, பாமக-வை வலுப்படுத்தட்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
Read More : விஷமாகும் உணவுகள்..!! மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதில் ஒளிந்திருக்கும் பேராபத்து..!! மக்களே உஷார்..!!



