தந்தை – மகனின் மோதலால் பாமகவே இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ராமதாஸும், மற்றொரு பக்கம் மகன் அன்புமணியும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையே, பாமக தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாக ராமதாஸின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
அதாவது, கடந்த 2022 மே 28ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக நியமிக்கப்பட்டார். அவரின் 3 ஆண்டுகால பதவிக்காலம் கடந்த மே 28ஆம் தேதியுடனே முடிந்து விட்டது. இதையடுத்து, ஆடிட்டர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய ராமதாஸ், கட்சி தலைவரின் பதவி காலாவதியான பிறகு தானாகவே அனைத்து அதிகாரமும் நிறுவனரான ராமதாஸின் கைகளுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இனிமேல் பொதுக்குழுவை கூட்டித்தான் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பிறகு தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். பாமக நிறுவனரான தனக்கு தான் கட்சியின் அனைத்து அதிகாரமும் உள்ளது என உற்சாகத்தில் இருக்கும் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார்.
இதற்கிடையே, பாமகவில் சிறப்பாக செயல்பட்டு கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது ஒதுங்கியுள்ள முன்னாள் நிர்வாகிகளை அழைத்து மீண்டும் அவர்களுக்கு பொறுப்பு வழங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாமக முன்னாள் மாநில தலைவர் வேல்முருகனை அழைத்து, அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க ராமதாஸ் முடிவு செய்துள்ளாராம். முன்னாள் நிர்வாகிகள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மீண்டும் பாமகவில் இணைவதன் மூலம் தனக்கான அதிகாரத்தை மீண்டும் பெற்று, கட்சியை கட்டுப்பாட்டுடன் வழிநடத்த ராமதாஸ் திட்டம் போட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.