தமிழ்நாடு அரசின் இடைக்கால் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த பட்ஜெட்டை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ திமுக அரசு தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.. பல்வேறு மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் பட்ஜெட்டில் பொய் சொல்லுவேன் என அடம்பிடித்திருக்கிறார் நிதியமைச்சர்.. எது குறித்தும் அக்கறை இல்லாமல் வழக்கம் போல் பட்ஜெட்டில் பொய்களை வாசித்துள்ளார் நிதியமைச்சர்..
கோவை, மதுரை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நிதியமைச்சர் ஏன் சமர்ப்பிக்கவில்லை? உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% அளவுக்கு குறைந்துள்ளது.. திமுக அரசின் பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை.. வருமானம் ஈட்டாத, கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது.. கோவில்கள் புனரமைப்பு ரூ.8200 கோடி செலவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் குறப்பட்டுள்ளது.
கோவில்களுக்கு ரூ.80 கோடி மட்டுமே செலவு செய்த அரசு ரூ.8,000 கோடி செலவிடப்பட்டதாக கூறியது எப்படி? கோவில்கள் புனரமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஓராண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக மக்களுக்கு உருப்படியாக பிரயோஜமான எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
தமிழ்நாட்டுக்கு மொத்தமாக பூஜ்ஜியத்தை மட்டுமே திமுக அரசின் பட்ஜெட் கொடுத்துள்ளது. 2027-ல் தமிழகத்தின் மொத்த கடன் தொகை 10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் உள்ளது.
திமுக அரசின் தோழி விடுதி திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆகியவை மத்திய அரசின் திட்டங்கள்.. மத்திய அரசு தரும் நிதியில் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு மாநில அரசு செய்வதாக திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.. மத்திய அரசு நிறைய நிதி கொடுக்கின்றனர்.. மத்திய அரசு எங்கேயும் மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் அணுகவில்லை.. தமிழக அரசு தான் ஓரவஞ்சனை உடன் செயல்படுகிறது.. இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.. விவசாயத்தை பொறுத்தவரை திமுக ஆட்சியில் 3 சதவீதம் தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.. வேளாண் துறைக்கு எதற்கு தனியாக பட்ஜெட் போடுகின்றனர்? வெள்ளை அறிக்கை கொடுங்கள்.. அப்போது தான் உண்மை தெரியும்.” என்று தெரிவித்தார்..



