பாஜகவில் அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதிமுக இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அண்ணாமலை கடும் அதிர்ச்சியில் இருந்தாராம். அரசியலில் தீவிரமாக இருந்தாலும், மற்ற சில விஷயங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினாராம். குறிப்பாக சர்வதேச வலிமையானவர்களுக்கான Iron Man பட்டத்தை பெற தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சியில் ஈடுபட்டாராம். மேலும் தினமும் 100 கி.மீ சைக்கிள் ஓட்டும் பயிற்சியை அவர் மேற்கொண்டு வந்தாராம்.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் நோக்கில் பாஜக தனது நிலையை வலுப்படுத்த திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதன் பின்னர் தான் உடலை வலுப்படுத்திக் கொண்டிருந்த அண்ணாமலை, மீண்டும் தனது அரசியல் கேமை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
திடீரென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை 2026 தேர்தலில் கூட்டணிக்குள் பாஜகவுக்கு நியாயமான தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது அதிமுக கூட்டணியில் பாஜக பலத்தின் அடிப்படையில் தொகுதிகளை பெற்றால், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதி என்றும் அந்த கடிதத்தில் கூறியிருந்தாராம். அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் சரி பாதி இடங்களில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
மதுரை கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியது, அண்ணாமலை பிரதமருக்கு எழுதிய கடிதம் என அடுத்தடுத்த சம்பவங்களால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்ததாம்.
இந்த நிலையில் இன்று அண்ணாமலை மூலம், அதிமுகவுக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறதாம்.. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய அளவிலான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்றும், நாளையும் தேதிகளில் பெரம்பலூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாம்.
தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதில் அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதிமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை அண்ணாமலைக்கு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம். இந்த பொறுப்பை அண்ணாமலைக்கு வழங்க பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் ஏற்கனவே ஓ.கே சொல்லிவிட்டாரம்.. எனவே இதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கு தொகுதி பேச்சுவார்த்தை பொறுப்பு வழங்கப்பட்டால், அதிமுகவால் அதனை ஏற்க முடியாது என்றே கூறப்படுகிறது. ஏனெனில் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் தான், கூட்டணி என்று கூறி தலைவரை மாற்ற வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. ஆனால் தற்போது மீண்டும் அண்ணாமலைக்கு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டால் அதனை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே மிகப்பெரிய கேள்வி.. 2026 தேர்தல் பல அதிரடி ட்விஸ்ட்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன நடக்கிறது..
Read More : மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான்…! அன்புமணி பகீர் குற்றச்சாட்டு…!