தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு, பாஜக மேலிடம் மிக உயரிய தேசிய பொதுச்செயலாளர் பதவியை வழங்க தயாராகி வருவதாக டெல்லி வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளன. தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, கடந்த சில மாதங்களாக அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியது. இந்நிலையில், கட்சியின் அகில இந்திய அளவில் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க பீடத்தில் அண்ணாமலையை அமர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கட்சியின் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றங்களை செய்ய மேலிடம் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, வரவிருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தேசிய அளவில் துடிப்பான இளம் தலைவர்களுக்குப் பொதுச்செயலாளர் பதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் அண்ணாமலையுடன் சேர்த்து ராம் மாதவ், அரவிந்த் மேனன், சம்பித் பத்ரா மற்றும் ரவீந்தர் ரெய்னா போன்ற ஜாம்பவான்களின் பெயர்களும் அடிபடுகின்றன. தற்போதுள்ள 6 பொதுச்செயலாளர்களில் மூவர் மாற்றப்பட வாய்ப்புள்ள நிலையில், அதில் ஒருவராக அண்ணாமலை இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
அண்ணாமலைக்கு இந்தப் பதவி உயர்வு கிடைக்கும் பட்சத்தில், தென்னிந்தியாவிலிருந்து பாஜகவின் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் மிக இளவயது தலைவர்களில் ஒருவராக அவர் உருவெடுப்பார். இது அவரது ஆதரவாளர்களிடையே புதிய உற்சாகத்தை பாய்ச்சியுள்ளதோடு, தமிழக அரசியலிலும் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக தேசிய அளவிலான அதிகாரத்துடன் வலம் வருவார்.
Read More : காலையிலேயே அதிர்ச்சி..!! அதிமுகவுடன் கூட்டணி இல்லை..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்..!!



