தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன..
தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது முதலே அண்ணாமலை அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. தான் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அண்ணாமலை அதிருப்தியில் இருக்கிறாராம்.. எனவே தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களிடம் வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதுதொடர்பாக தான் தேசிய தலைமைக்கு அவர் கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. எனவே வரும் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.. மேலும் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளதாகவும் தெரிகிறது..
இந்த சூழலில் தான் அண்ணாமலை – வானதி சீனிவாசன் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.. கடந்த 29-ம் தேதி பிரச்சாரத்திற்கு கோவை வழியாக பிரதமர் மோடி கேரளா சென்றார்.. அப்போது பிரதமரை வரவேற்க பாஜக தலைவர்கள் கோவையில் குவிந்தனர்.. ஆனால் அண்ணாமலை அதில் பங்கேற்கவில்லை.. இதையடுத்து அண்ணாமலை திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் அவரின் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்..
எனினும் அண்ணாமலை வராதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன், வரவேற்பாளர் பட்டியலில் அவர் பெயர் இருந்ததாக விளக்கம் அளித்திருந்தார்.. தான் விமான நிலையத்திற்கு வந்த போது கூட அண்ணாமலை பற்றி கேட்டதாகவும் வானதி கூறியிருந்தார்..
பிரதமரை வரவேற்கும் பாஜக தலைவர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயரை சேர்க்கவில்லை என்று அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. மேலும் வானஹ்டி தவறான தகவலை வெளியிடுவதாவும் அவர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அண்ணாமலை தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்..
இதுகுறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ அண்ணாமலை ஊரில் இல்லாததால் தான் வரவேற்பாளர் பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை.. பிரதமர் வரவேற்பு தொடர்பாக அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் பேசினேன்..” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு கால தாமதமாவதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்குமான மோதல் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை வடக்கு தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று பியூஸ் கோயல் தொடங்கி , அமித்ஷா வரை முறையிட்டுள்ளார். இதனால் பாஜக தலைமை வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.. வானதியை அறிவித்தால் அண்ணாமலை ஏற்க மாட்டார் அண்ணாமலையை அறிவித்தால் வானதி ஏற்க மாட்டார் இருவருமில்லாமல் வேறு புதிய நபரை அறிவிக்கலாமா என்றும் பாஜக தலைமை யோசிக்கிறதாம்.
இன்று அல்லது நாளை, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர் ரேஸில் வெல்ல போவது யார் அண்ணாமலையா? இல்லை வானதியா? என்பது விரைவில் தெரியவரும்..



