திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதானக்கூடத்தில் வழங்கப்படும் அன்னபிரசாதம் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவுகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.

பிரம்மோற்சவத்தின் 5 வது நாளில் , ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளுடன் சாமி வீதி உலா நடைபெற்றது. இதனைக்காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக முக்கியமான இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை இன்று இரவு நடைபெற உள்ளது. சுமார் 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே தேவஸ்தான நிர்வாகம் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பாதுகாப்புக்காக 5000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனங்கள் செல்ல தடை : பிரம்மோற்சவ விழாவை ஒட்டி திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
இதனிடையே அன்னதானக்கூடத்தில் வழங்கப்படும் அன்னபிரசாதம் பக்தர்களின் வசதிக்காக நான்கு மாட வீதிகளில் வழங்கப்பட உள்ளது. நள்ளிரவு வரை அன்னபிரசாதம் வழங்கப்படுவதால் பக்தர்கள் அன்ன பிரசாதத்தை எந்நேரமும் வாங்கிக்கொள்ளலாம்.