தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில், கரூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா (17). இவர், கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வலது மூட்டு பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்ச்சி இழந்ததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், அவரது கால் வீங்கியிருந்தது. எனவே உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரின் வலது காலை அகற்றினர். பின்னர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியாவின் உடல்நிலை மோசமான நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

பிரியா உயிரிழந்த சோகம் இன்னும் மறைவதற்குள் கரூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கரூரில் ஆசிரியை தவறான சிகிச்சையால் காலை இழந்த சோகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கரூரை சேர்ந்த ஷீலா, கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதில் நடைபெற்ற தவறான சிகிச்சை காரணமாக கால் நிறம் மாறிப்போய் அகற்றப்பட்டது. தற்போது அவர் தமிழக அரசிடம் நீதி கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.