கோயில்களில் வழிபாட்டின்போது சிலருக்கு திடீரென கண்ணீர் வருவதையும், கொட்டாவி ஏற்படுவதையும், சில சமயங்களில் சாமி சிலையிலிருந்து பூ விழுவது, மணியோசை கேட்பது போன்ற அனுபவங்கள் நிகழ்வதையும் பலர் பார்த்திருப்பார்கள். இவையெல்லாம் சாதாரணமான நிகழ்வுகளா, இல்லை அதற்கு ஏதேனும் ஆன்மிக அர்த்தம் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது.
பொதுவாக, கோயிலுக்குச் செல்வதன் முக்கிய நோக்கம், மனதில் இருக்கும் குறைகளை கடவுளிடம் சொல்லுவதும், வேண்டுதல்கள் நிறைவேறினால் பரிகாரம் செய்வதுமே. இன்னும் சிலர் மனஅமைதி தேடி கோயில்களுக்குச் செல்கிறார்கள். அத்தகைய தருணங்களில், இறைவனை மனமுருக வழிபடும் போது சிலரது கண்களில் இருந்து தன்னிச்சையாக கண்ணீர் வழிந்தோடுகிறது.
ஆன்மிக நம்பிக்கைகளின்படி, இது இறைவனுக்கும் பக்தருக்கும் இடையிலான ஆழமான, உன்னதமான தொடர்பின் வெளிப்பாடு என கூறப்படுகிறது. தன்னை மீறிய ஒரு சக்தி தன்னுள் செயல்படுவதை உணரும் போது, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாமல், கண்ணீராக வெளிப்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இது அனுபவிக்க மட்டுமே இயலும்; அறிவியல் ரீதியாக விவரிக்க முடியாத உணர்வு எனவும் கூறப்படுகிறது.
மனசோர்வு, மன உளைச்சல், அமைதியற்ற நிலை ஆகிய நேரங்களில், மனிதன் அதிகமாக கடவுளை நினைக்க ஆரம்பிக்கிறான். அந்த மனநிலையில் இறைவனை வேண்டும்போது, உள்ளத்தில் தேங்கியிருந்த வேதனை அல்லது பாரம் வெளியேறும் வடிவமாகவும் கண்ணீர் வருகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், ஆன்மிக விளக்கங்களின்படி, நீங்கள் விரும்பி வழிபடும் கடவுளின் முன் தன்னிச்சையாக கண்ணீர் வந்தால், கடவுள் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். உங்கள் பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது
என்ற அடையாளமாக அதனை பார்க்கலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அதோடு, கண்ணீர் மூலம் கடவுள் உங்களுக்கு ஒரு குறிப்பை வழங்குகிறார் என்றும் நம்பப்படுகிறது. அந்தக் குறிப்பை மனதார உணர்ந்து, வாழ்க்கையில் புரிந்து கொண்டு செயல்பட்டால், தற்போது உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீரும் என்றும் ஆன்மிக நம்பிக்கை உள்ளது.
Read more: பற்றி எரியும் விஐடி பல்கலைக்கழகம்.. கலவரத்தில் ஈடுபட்ட 4,000 மாணவர்கள்.. பெரும் பதற்றம்!



