கொசுவத்தி புகையால் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலம் சாஸ்திரி பூங்கா பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் கொசு தொல்லை காரணமாக இரவு தூங்குவதற்கு முன்பு கொசுவத்தி ஏற்றி வைத்து விட்டு தூங்கியுள்ளனர். இந்த நிலையில், கொசுவத்தியின் சுருள் பஞ்சு மெத்தையின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்து அறை முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. இதில், நச்சுத்தன்மை கொண்ட புகை அறைக்குள்ளயே இருந்ததால் தூக்கத்தில் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 2 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.