நமக்கு இருக்கின்ற பிரச்சினையால் நம்மைவிட, நம்முடன் இருப்பவர்கள் அதிக தொந்தரவை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றால் அது குறட்டை சத்தம் தான். குறட்டை சத்தத்தால் வெளிநாடுகளில் விவாகரத்து பெற்றவர்களும் உண்டு. அவ்வளவு ஏன், நாமே கூட முழுமையான தூக்கத்தை தூங்கிவிட முடியாது.
என்ன செலவானாலும் பரவாயில்லை, எத்தனை மருத்துவரைப் பார்த்தாலும் பரவாயில்லை, இந்தக் குறட்டை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் முதலில் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குறட்டை எப்படி உருவாகிறது? : வாய் மற்றும் மூக்கு இடையிலான சுவாசப் பாதையானது தூங்கும்போது அடைபடுவதன் காரணமாக குறட்டை சத்தம் உண்டாகிறது. நம் தொண்டை அமைப்பு கூட நமக்கு குறட்டை வருவதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு குட்டையான கழுத்து மற்றும் தடிமனான சருமம் அல்லது குரல் வளையை ஒட்டி சதை தொங்குவது, உள்நாக்கு வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக குறட்டை சத்தம் கேட்கலாம்.
உடல் பருமன் உடையவர்களை பார்த்தாலே இவர்களெல்லாம் நன்றாக குறட்டை விட்டு தூங்குபவர்கள் என்ற முன் முடிவுக்கு நாம் வந்துவிடுவோம். அது ஓரளவுக்கு உண்மை தான். கழுத்து மற்றும் குரல்வலை பகுதியை சுற்றிய அதிகப்படியான தசைகளும் கூட குறட்டைக்கு காரணமாக அமைகின்றன. அலர்ஜி, சைனஸ் தொற்று அல்லது மூக்கு உள்ளே சதை வளர்ச்சி போன்றவை காரணமாக மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் காற்று சுவாசப் பாதையில் தடை ஏற்படும் நிலையில் அதன் காரணமாக உங்களுக்கு குறட்டை ஏற்படலாம்.
புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் என்ற விழிப்புணர்வு வாசகத்தை ஒவ்வொரு முறையும் தியேட்டர் செல்லும்போது கேட்டிருப்பீர்கள். அதே சமயம், புகைப்பிடிப்பதால் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள தசைகள் எரிச்சல் அடைகின்றன. இதனால் வீக்கம் மற்றும் மூச்சுப் பிரச்சினை ஏற்படும்.
உறக்கத்தின் நடுவே மூச்சுத்திணறலுடன் குறட்டையை உண்டாக்குவது ஸ்லீப் ஆப்னியா என்னும் தூக்கக்குறைப்பாடு இதில் அப்ஸ்ட்ரக்டிவ் ஆப்னியாவால்(OSA) பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உறக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசம் தடைபடும். இவர்கள் போதுமான நேரம் தூங்கி எழுந்தாலும், காலையில் உடல்சோர்வை உணர்வார்கள். இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.