குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க, பலருக்கு சூடான பானங்களை அருந்தும் பழக்கம் உண்டு. அவர்கள் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சூடான தேநீர் மற்றும் காபி குடிக்கிறார்கள். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் இவற்றைத் தருகிறார்கள். இருப்பினும், இந்தப் பானங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேநீர் மற்றும் காபியில் உள்ள காஃபின் குழந்தைகளின் தூக்கம், நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு தேநீர் மற்றும் காபி கொடுப்பதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
எலும்புகள் பலவீனமடைதல் குழந்தைகளின் உடல்கள் வளரும் நிலையில் உள்ளன, எனவே எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். காஃபின் நிறைந்த தேநீர் மற்றும் காபியை அதிகமாகக் குடிப்பதால், உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவது குறைகிறது. இது எலும்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கலாம், இதன் விளைவாக அவை பலவீனமடைகின்றன.
தூக்கப் பிரச்சனைகள் தேநீர் மற்றும் காபியில் காஃபின் உள்ளது. இது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது. காஃபினுடன், அவற்றில் சிறிய அளவில் தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. நாம் தூங்குவதற்கு உதவும் வகையில் ‘அடினோசின்’ என்ற வேதிப்பொருள் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், நாம் காஃபின் கலந்த பானங்களைக் குடிக்கும்போது, மூளை அந்த வேதிப்பொருள் ஏற்பிகளைத் தடுக்கிறது, இதன் விளைவாக தூக்கமின்மை ஏற்படுகிறது. குழந்தைகள் தேநீர் அல்லது காபி குடித்தால், அவர்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது, இது உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
உடல் பருமன் அபாயம் சர்க்கரை அளவில் ஏற்படும் இத்தகைய ஏற்ற இறக்கங்கள் குழந்தைகளின் பசியை அதிகரிக்கக்கூடும், இதனால் அவர்கள் அதிக உணவு உண்ண வாய்ப்புள்ளது. இது இறுதியில் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இளம் வயதில் ஏற்படும் உடல் பருமன் பல உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சர்க்கரை அளவு அதிகரிப்பு இந்தியர்கள் தங்கள் தேநீர் மற்றும் காபியில் அதிக சர்க்கரை சேர்க்கிறார்கள். குழந்தைகள் இந்த பானங்களை வெறும் வயிற்றில் குடித்தால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகரித்து, அவர்கள் சுறுசுறுப்பாக உணர்கிறார்கள். ஆனால் அந்த சர்க்கரை அளவு குறையும்போது, குழந்தைகள் சோர்வு, பலவீனம் அல்லது மனநிலை மாற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் அதிகப்படியான தேநீர் அல்லது காபி குடிக்கும்போது எதிர்கொள்ளும் மற்ற பிரச்சனைகளில் அமிலத்தன்மை, நீரிழப்பு, தூக்கமின்மை, அதிகரித்த இதயத் துடிப்பு, கவனக்குறைவு, போதைக்கு அடிமையாதல், சோர்வு, தலைவலி, பலவீனம், ஞாபக மறதி மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.
பெற்றோருக்கான அறிவுரை: ADHD மருந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு தேநீர் அல்லது காபி கொடுக்கக்கூடாது, ஏனெனில் இது மருந்தின் செயல்திறனைக் குறைக்கக்கூடும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேநீர் அல்லது காபி கொடுக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறந்த மாற்று வழிகள் தேநீர் அல்லது காபிக்கு பதிலாக, குளிர்காலத்தில் உடலுக்கு கதகதப்பைத் தரும் சில ஆரோக்கியமான பானங்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இந்த பட்டியலில் மஞ்சள் பால் முதலிடத்தில் உள்ளது. மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாகச் செயல்பட்டு, சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்கிறது.
ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, கொதிக்க வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சுவைக்காக அதில் வெல்லம் அல்லது தேன் சேர்க்கலாம். பாதாம் பால் குடிப்பதும் நல்லது. பாதாமில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் புரதங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உடல் வலிமைக்கும் உதவுகின்றன. ஊறவைத்த பாதாமைக் அரைத்து, அந்த விழுதை பாலில் கலந்து கொதிக்க வைக்கவும். அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்ப்பது நல்லது.



