தமிழகத்தில் மின்சார வாகனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் மின்சார கொள்கை அமலுக்கு வந்தது. இதனால், தமிழகத்தில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்குச் சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணத்தில் 50% முதல் 100% வரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவை டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் மின்சார வானங்களின் விலை 15 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் விதமாக, புதிய மின்சார கொள்கையை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 2025 டிசம்பர் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மின்சார வானங்கள் வாங்குபவர்களுக்குச் சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணத்தில் 50 முதல் 100 சதவிகிதம் வரை விலக்கு தொடர்ந்து வழங்கப்படும். இந்த முடிவுக்கு முதலமைச்சர் தலைமையிலான மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், மின்சார வாகனம் வாங்க விரும்புவோர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.