நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஐடி துறையினர் போல நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கும் ஒரு நிம்மதியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றின்படி, காலில் உள்ள ஒரு சிறிய தசைக்கு நாம் கொடுக்கும் பயிற்சி, ரத்தச் சர்க்கரை அளவை குறைப்பதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மனிதனின் கெண்டைக்கால் பகுதியில் உள்ள ‘சோலியஸ்’ (Soleus) என்ற தசையைத் தூண்டுவதன் மூலம், உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) வியக்கத்தக்க வகையில் மேம்படுத்த முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
‘சோலியஸ் புஷ்-அப்’ (Soleus Push-up) எனப்படும் இந்த எளிய பயிற்சியைச் செய்வது மிகவும் எளிது. ஜிம்முக்குச் செல்லவோ அல்லது கடினமான கருவிகளைப் பயன்படுத்தவோ தேவையில்லை. நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது, உங்கள் பாதத்தின் முன்பகுதியைத் தரையில் ஊன்றி, குதிகால்களை மட்டும் மேலெழும்பி தூக்கி, பின் மெதுவாக கீழே இறக்க வேண்டும். நாம் சாதாரணமாக நடக்கும்போது செலவிடப்படும் குளுக்கோஸ் அளவைவிட, அமர்ந்த நிலையில் செய்யப்படும் இந்தப் பயிற்சி ரத்தத்தில் உள்ள சர்க்கரையை மிக விரைவாக எரிக்க உதவுகிறது. குறிப்பாக, உணவு உண்ட பிறகு இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம், ரத்தத்தில் குளுக்கோஸின் தாக்கம் சுமார் 52 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வயது முதிர்வு காரணமாக நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் மற்றும் அலுவலகப் பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு இந்த ‘சோலியஸ் புஷ்-அப்’ ஒரு வரப்பிரசாதமாகும். மற்ற தசைகளைப் போலன்றி, இந்த சோலியஸ் தசை சோர்வடையாமல் நீண்ட நேரம் இயங்கும் தன்மை கொண்டது என்பதால், வேலை பார்த்துக் கொண்டே இதை தடையின்றி செய்யலாம். உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்லாமல், அமர்ந்த இடத்திலேயே ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இத்தகைய எளிய மருத்துவ முறைகளை இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ற தீர்வாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : “பாவம் போக்கும் மாசி மகம்”..!! இந்த நாளில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா..? எப்போது வருகிறது..?



