ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது..

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் அகவிலைப்படி உயர்வு 38%ல் இருந்து அது 42 சதவீதமாக அதிகரிக்கும்.. தற்போது, 38% வீதத்தில், ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,840 அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 4% உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களுக்கு மாதம் ரூ.7,560 கிடைக்கும்.
அடுத்த 15 நாட்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதாவது மார்ச் 1-ம் தேதி நடைபெற உள்ள அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.. அதன்படி ஹோலி பண்டிகை அல்லது அதற்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவை மத்திய அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஹோலி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த அறிவிப்பின் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.