ஆன்லைன் ஷாப்பிங், பயண முன்பதிவு, அதிக மதிப்புள்ள செலவுகள் என, அன்றாட வாழ்க்கையில் கிரெடிட் கார்டுகள் ஒரு வழக்கமான கட்டண முறையாக மாறிவிட்டன. கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், நிதி பரிவர்த்தனைகளில் கண்காணிப்பை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2026 வருமானவரி விதிகள் – புதிய முன்மொழிவுகள்
2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரு என்று எதிர்பார்க்கப்படும் வருமான வரி சட்ட விதிகள் 2026 என்ற வரைவு விதிகள், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கான பல முன்மொழிவுகளை கொண்டுள்ளன. பொதுமக்கள் இதுகுறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.. இருப்பினும், விரைவில் நடைமுறைக்கு வரக்கூடிய மாற்றங்கள் குறித்து கிரெடிட் கார்டு பயனாளர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
அதிக மதிப்புள்ள கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் – தகவல் அளித்தல் கட்டாயம்
இந்த வரைவு விதிகளில் மிக முக்கியமான மாற்றம், பெரிய அளவிலான கிரெடிட் கார்டு செலவுகளைப் பற்றியது. புதிய முன்மொழிவுகளின்படி, ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் கிரெடிட் கார்டு பில் தொகை, பணமில்லா (cashless) முறைகளில் செலுத்தப்பட்டால் வங்கிகள் வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்..
ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் தொகை ரொக்கமாக (cash) செலுத்தப்பட்டால் வங்கிகள், வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.. இந்த நடவடிக்கையின் நோக்கம், அதிக மதிப்புள்ள செலவு முறைகளை கண்காணிப்பதும், அறிவிக்கப்படாத வருமானம் வரித்துறையின் கண்காணிப்பிலிருந்து தப்பிச் செல்லாமல் தடுப்பதும் ஆகும். அதனால், அதிகமாக செலவு செய்யும் கிரெடிட் கார்டு பயனாளர்களின் பரிவர்த்தனைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
பான் கார்டு விண்ணப்பத்திற்கு முகவரி சான்றாக கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்
வரைவு விதிகளில் இன்னொரு முக்கியமான முன்மொழிவு என்னவென்றால், கடந்த 3 மாதங்களுக்கான கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்டை, PAN கார்டு விண்ணப்பத்தின் போது செல்லுபடியான முகவரி சான்றாக ஏற்றுக்கொள்ள அனுமதி வழங்குவது. இதனால், பாரம்பரிய முகவரி சான்றுகளை வழங்க சிரமப்படுபவர்களுக்கு ஆவணப் பணிகள் எளிதாகும்.
வரி செலுத்த கிரெடிட் கார்டு – அதிகாரப்பூர்வ கட்டண முறையாக அங்கீகாரம்
மேலும், ஜிஎஸ்டி மற்றும் வருமானவரி செலுத்துவதற்கான மின்னணு கட்டண முறையாக கிரெடிட் கார்டுகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது, வரி செலுத்துபவர்கள் பெரும்பாலும் டெபிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் முறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாற்றம் வரி செலுத்துவோருக்கு வசதியை அதிகரிக்கலாம். ஆனால், கிரெடிட் கார்டு மூலம் வரி செலுத்தும் போது, செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பதையும் பயனாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நிறுவனங்கள் வழங்கும் கிரெடிட் கார்டுகள் – வரி விதிப்பு
ஒரு நிறுவனம் தனது ஊழியருக்கு கிரெடிட் கார்டு வழங்கி, அதன் மூலம் ஏற்பட்ட செலவுகளை நிறுவனம் செலுத்தினால், அந்தத் தொகை ஊழியரின் வருமானமாகக் கருதி வரிக்குட்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த செலவுகள் முழுமையாக அலுவலகப் பயன்பாட்டுக்காகவே செய்யப்பட்டவை என்றும், அதற்கான சரியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் நிறுவனம் வைத்திருந்தால், வரிவிலக்கு பெற வாய்ப்பு உள்ளது.
புதிய கிரெடிட் கார்டுக்கு பான் கட்டாயம்
மேலும், எந்த நிறுவனத்திலிருந்தும் புதிய கிரெடிட் கார்டு பெற பான் எண் கட்டாயம் என்ற விதியை கொண்டு வரவும் வரைவு விதிகள் பரிந்துரைக்கின்றன. இதன் மூலம், கிரெடிட் கார்டு பயன்பாடு நேரடியாக வருமானவரி பதிவுகளுடன் இணைக்கப்படும். இதனால், ஒருவர் அறிவித்துள்ள வருமானத்துடன் அவருடைய செலவுகளை வரித்துறை எளிதாக ஒப்பிட்டு பார்க்க முடியும்.
பயனர்கள் கவனிக்க வேண்டியது
இவை அனைத்தும் தற்போது வரைவு முன்மொழிவுகளே; இறுதி அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், இந்த விதிகள் அமலுக்கு வந்தால், கிரெடிட் கார்டு பயனாளர்கள் மீது வரி கண்காணிப்பு அதிகரிக்கலாம். அதனால், முன்கூட்டியே இந்த மாற்றங்களை அறிந்து வைத்துக்கொள்வது, எதிர்காலத்தில் சட்டப்படி இணங்க (compliance) செயல்படவும், தேவையற்ற வரி சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவும்.
Read More : உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும், நீங்கள் ரூ. 10,000 எடுக்கலாம்..! எப்படி தெரியுமா..?



