கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கருமனல் கிராமத்தில் புகழ்பெற்ற மருத்துவர்களான அருண் நாயர் மற்றும் மீனா விஜயன் தம்பதியினரின் அழகான வாழ்க்கையில், கார் ஓட்டுநர் ரஞ்சித்தின் வருகை ஒரு சுனாமியைப் போலப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மீனாவுக்கும், 22 வயதான கார் ஓட்டுநர் ரஞ்சித்துக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் தென்னந்தோப்பு பண்ணை வீட்டில் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவர் மருத்துவப் பணிகளுக்காக வெளியூர் செல்லும் நேரங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இந்த ஜோடியின் செயல், ரகசியமாக தொடங்கினாலும் தோட்டத்து வேலைக்காரர்கள் மூலம் ஊர் முழுக்கப் பரவியது. இறுதியில் இந்த தகவல் மருத்துவர் அருண் நாயரின் காதுகளுக்கும் எட்டியது. தனது மனைவியின் துரோகத்தை நேரில் கண்டு உறுதி செய்த அருண், ஆத்திரத்தில் அவர்களைப் பழிவாங்க ஒரு திட்டத்தை தீட்டினார்.
மருத்துவரான அருண், தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்திக் கொடிய விஷத்தை அவர்கள் உண்ணும் உணவில் கலந்துள்ளார். உணவை சாப்பிட்டு மயக்கமடைந்த இருவரையும், தோட்டத்தில் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் உயிருடன் தள்ளி மூடியுள்ளார். பின்னர், தனது மனைவியும் டிரைவரும் ஓடிப்போய்விட்டதாக நாடகமாடி போலீசில் புகாரும் அளித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் வரை இந்த மர்மம் நீடித்தது. மீனா உண்மையில் ஓடிப்போய்விட்டார் என்றே ஊர் மக்கள் நம்பினர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் தற்செயலாக கண்டெடுத்த ஒரு விலை உயர்ந்த ஐபோன் இந்த வழக்கை தலைகீழாக மாற்றியது. அந்தப் போனை ஆன் செய்தவுடன் கிடைத்த சிக்னல், அது காணாமல் போன டாக்டர் மீனாவினுடையது என்பதை போலீசாருக்கு உறுதிப்படுத்தியது. பின்னர் நடந்த அதிரடி விசாரணையில் அருண் நாயர் உண்மையை ஒப்புக்கொண்டார். தோண்டப்பட்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவரிடம் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.



