உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக பதின்ம வயது சிறுவர்கள் (16 வயதுக்குட்பட்டோர்) இதில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், குழந்தைகளின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், சமூக ஊடகங்களின் தீய தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா ஒரு முன்னோடி முடிவை எடுத்துள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், எக்ஸ், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகள் உடல் மற்றும் மனநல ரீதியாகப் பாதிக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.
இதன் விளைவாக, ஆஸ்திரேலிய அரசு ஒரு புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இனி சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, வரும் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வரவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே டென்மார்க், நார்வே போன்ற சில நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்யும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.
குழந்தைகளின் உளவியல் மற்றும் சமூக நலனைப் பாதுகாக்கும் இந்த ஆஸ்திரேலியாவின் நடவடிக்கையைப் போல, மற்ற உலக நாடுகளும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பதே பல பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு மற்ற நாடுகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தை கவனிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read More : உங்கள் துணையுடன் அடிக்கடி சண்டை வருதா..? இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்க இதை பண்ணுங்க போதும்..!!



