கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மெட்ரோ ரயிலில் சிறப்பு கட்டண சலுகை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேசமயம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவாயை ஈட்டுவதற்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் முழுமையாக பயனடைய மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நேரடியாக சென்று கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.

அதனால் மாணவர்களுக்கு டிக்கெட் கட்டண சலுகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலமாக மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு பாதுகாப்பாகவும் விரைவாகவும் கல்லூரிக்கு சென்று திரும்ப முடியும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.