முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கு போட்டு FBI அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை, டிரம்ப் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வீடியோ, ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது.
இதைப் பார்த்து அதிபர் டிரம்ப் சிரிப்பது போலவும், பின்னர் ஆரஞ்சு நிற உடை அணிந்து ஒபாமா சிறைச்சாலையில் இருப்பதையும் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன. ஒபாமாவை, மிகப் பெரிய தேர்தல் மோசடிக்காரர் என டிரம்ப் கடந்த வாரம் விமர்சித்து இருந்தார். முன்னதாக 2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக ஒபாமா விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார்.
ஒபாமா தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசியலுக்காக உளவுத்துறையை பயன்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், ஒபாமாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் துளசி கபார்ட் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற ஏ.ஐ., வீடியோவை டொனால்டு டிரம்ப் பகிர்ந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பலர், டிரம்ப் பொறுப்பில்லாதவர் என விமர்சித்து வருகின்றனர்.
Readmore: நோட்..! வெளியானது குரூப்-4 தேர்வுக்கான விடைத்தாள்…! எப்படி பார்ப்பது…?