நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,300-ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு முதியவர், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுவாச பிரச்சனை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படும் இணைநோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், கொரோனா உறுதி செய்யப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 44 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இவர்களில் பெரும்பாலனோருக்கு ஏற்கனவே பல உடல்நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன், தனிமைப்படுத்தும் படுக்கைகள், வென்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் இருப்பு இருப்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், இருமல் – காய்ச்சல் இருக்கும்போது நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், கடுமையான சுவாச நோய் பிரச்சனை இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், வெளியில் சென்று வந்தால் சோப்பு போட்டு நன்கு கை கழுவ வேண்டும் என்றும் அறிகுறிகள் மோசமானால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : மாணவர்களே..!! மதிப்பெண்களில் சந்தேகமா..? இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!! கட்டணம் எவ்வளவு..?