இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் போன் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்ட அதே வேளையில், சைபர் குற்றவாளிகளின் வேட்டைக்களமாகவும் அது மாறியுள்ளது. குறிப்பாக, உங்கள் அடையாள ஆவணங்களை வைத்து உங்களுக்குத் தெரியாமலேயே யாரோ ஒருவர் சிம் கார்டு வாங்கி, அதனை சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தினால், இறுதியில் சட்டம் உங்கள் கதவையே தட்டும். இத்தகைய ஆபத்தான சூழலில் இருந்து பொதுமக்களை காக்க, மத்திய தொலைத்தொடர்புத் துறை ‘சஞ்சார் சாதி’ (Sanchar Saathi) என்ற வலிமையான பாதுகாப்பு கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு இணையதளம் மற்றும் மொபைல் செயலி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், கூகுள் பிளே ஸ்டோரில் இதே பெயரில் பல போலி செயலிகள் உலா வருகின்றன. எனவே, செயலியைப் பதிவிறக்கும் போது அது ‘மத்திய தொலைத்தொடர்புத் துறை’ (Department of Telecommunications) மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதா என்பதை உறுதி செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், பாதுகாப்பிற்குப் பதில் உங்கள் தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளது.
உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன என்பதைச் சரிபார்ப்பது மிகவும் எளிதானது. சஞ்சார் சாதி செயலியில் உள்ள ‘Know Mobile Connections in Your Name’ என்ற பகுதிக்குச் சென்று உங்கள் விவரங்களை உள்ளிட்டால், உங்கள் ஆவணத்தில் வழங்கப்பட்ட அனைத்து மொபைல் எண்களின் பட்டியலும் திரையில் தோன்றும். ஒருவேளை அந்தப் பட்டியலில் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் எண் இருந்தால், அதனை அங்கேயே உடனடியாக ‘ரிப்போர்ட்’ செய்து முடக்குவதற்கான வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, உங்கள் கைபேசி தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதன் 15 இலக்க தனித்துவமான IMEI எண்ணைக் கொண்டு போனை முழுமையாக முடக்கிவிடலாம். இதன் மூலம் திருடிய நபர் அந்த போனில் எந்த சிம் கார்டையும் போட்டுப் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த முடியும். அரசு இத்தகைய நவீன தொழில்நுட்பப் பாதுகாப்பை வழங்கினாலும், முகம் தெரியாதவர்களுக்கு ஓடிபி (OTP) பகிராமல் இருப்பதும், அவ்வப்போது நமது பெயரில் உள்ள இணைப்புகளைச் சரிபார்ப்பதும் நமது சமூகப் பொறுப்பாகும். விழிப்புணர்வுடன் செயல்படுவதே சைபர் குற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே வழியாகும்.
Read More : எஸ்.ஐ. தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு..!! உடனே செக் பண்ணுங்க..!! உடல் தகுதித் தேர்வு எப்போது..?



