நகைக்கடன் என்றாலே தங்க நகைகளை மட்டுமே அடகு வைக்கும் நிலை மாறி, இனி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் கடன் பெறும் வசதி வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு, ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் வெள்ளிக்கு நிதிச் சந்தையில் ஒரு புதிய மதிப்பை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் கடன் கிடையாது..?
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, எல்லா வெள்ளிப் பொருட்கள் மீதும் கடன் பெற முடியாது.
கடன் பெற அனுமதிக்கப்படும் பொருட்கள் : வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி நாணயங்கள் மீது மட்டுமே கடன் பெற முடியும்.
கடன் பெற முடியாத பொருட்கள் : பார் வெள்ளி (Silver Bars), இ.டி.எப். (ETF), மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற வெள்ளி சார்ந்த நிதிச் சொத்துகள் மீது கடன் பெற முடியாது.
கடனுக்கான வரம்புகள் என்ன?
வெள்ளியை அடகு வைத்துப் பெறும் கடனின் அளவு, தேவைப்படும் நிதி மற்றும் அடகு வைக்கப்படும் வெள்ளியின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மாறுபடுகிறது.
குறைந்த கடன் : ரூ.2.5 லட்சம் வரை கடன் தேவைப்பட்டால், அடகு வைக்கப்படும் வெள்ளியின் மொத்த மதிப்பில் அதிகபட்சமாக 85% வரை கடன் கிடைக்கும்.
நடுத்தர கடன் : ரூ.5 லட்சம் வரை நிதி தேவைப்படும் பட்சத்தில், வெள்ளியின் மதிப்பில் 80% கடன் வழங்கப்படும்.
அதிக கடன் : ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன் தேவைப்பட்டால், வெள்ளியின் மதிப்பில் 75% கடன் வழங்கப்படும்.
வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை இந்த அடகு வைக்கப்பட்ட வெள்ளியின் மதிப்பைத் தக்கவைக்கும் பொறுப்பு வாடிக்கையாளருக்கு உண்டு என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், ஒரு தனிநபர் அடகு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள வெள்ளியின் அளவுக்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் அதிகபட்சமாக 10 கிலோ வரை வெள்ளி நகைகளை அடகு வைக்கலாம். வெள்ளி நாணயங்களைப் பொறுத்தவரை, அரை கிலோ வரை மட்டுமே அடகு வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, சாதாரண மக்களுக்கு அவசரத் தேவைகளுக்காகத் தங்கத்தை மட்டுமல்லாமல், தங்கள் வசம் உள்ள வெள்ளியின் மதிப்பையும் பணமாக மாற்றிக்கொள்ள ஒரு புதிய வழியைத் திறந்துவிட்டுள்ளது.
Read More : BREAKING | மீண்டும் அணுகுண்டை தூக்கிப் போட்ட அமலாக்கத்துறை..!! கைதாகிறார் அமைச்சர் கே.என்.நேரு..?



