ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171, அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் முதலில் 30 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 133 பேர் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்ட நிலையில், தற்போது விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவருமே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் விபத்து குறித்து பேசினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்யுமாறு இரு அமைச்சர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இன்று முன்னதாக, ஷா, விபத்தைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடனும் பேசினார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய அவர், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. பல்வேறு உலகத் தலைவர்களும் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக தங்கள் இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இத்தாலி, கனடா, மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகள் இந்த துயரமான நேரத்தில் இந்தியா உடன் நிற்பதாக தெரிவித்துள்ளன.
Read More : MAYDAY அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்.. கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன..?