ரஷ்யப் பெண்களுடன் உடலுறவு கொண்ட பிறகு பில் கேட்ஸுக்கு பாலியல் நோய் ஏற்பட்டது என்று எப்ஸ்டீன் கோப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அமெரிக்க நீதித்துறை, நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில் சேகரிக்கப்பட்ட அதிகளவிலான ஆவணங்களை வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு வெளியிட்டது. இந்த ஆவணங்கள் வெளியீட்டின் மூலம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தொடர்பான பழைய குற்றச்சாட்டுகள் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக, பாலியல் தொடர்பான நோய் (STD) குறித்த குற்றச்சாட்டுகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆவணங்களை துணை அட்டார்னி ஜெனரல் டாட் பிளாஞ்ச் வெளியிட்டார். சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்கங்கள், 2,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்கள் இதில் அடங்கும். கடந்த டிசம்பரில் வெளியிடப்படாத சில முக்கிய ஆவணங்களும் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டியதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
பில் கேட்ஸை குறிவைக்கும் எப்ஸ்டீனின் மின்னஞ்சல் வரைவுகள்
புதியதாக வெளியான ஆவணங்களில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கருதப்படும் சில மின்னஞ்சல் வரைவுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், பில் கேட்ஸ் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ரஷ்ய பெண்களுடன் வைத்துக் கொண்ட உடலுறவு காரணமாக பாலியல் நோய் ஏற்பட்டதை தனது மனைவி மெலிந்தா ஃப்ரெஞ்ச் கேட்ஸிடம் மறைக்க முயன்றதாக அந்த மின்னஞ்சல்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த மின்னஞ்சல்கள், பில் கேட்ஸின் நீண்டகால அறிவியல் ஆலோசகர் போரிஸ் நிகோலிக் பெயரில் எழுதப்பட்டதாகக் காட்டப்படுகின்றன. அதில், கேட்ஸுக்கு மருந்துகள் பெற்றுத் தருதல், ரகசிய சந்திப்புகளை ஏற்பாடு செய்தல் போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மற்றொரு மின்னஞ்சல் வரைவில், எப்ஸ்டீன், நிகோலிக் பெயரில் பில் கேட்ஸுக்கு நேரடியாக எழுதியதாக கூறப்படுகிறது. அதில், பாலியல் நோயை பற்றிய மின்னஞ்சல்களை அழிக்குமாறு கேட்ஸ் கேட்டதாகவும், அந்த நோய்க்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மெலிந்தாவுக்கு தெரியாமல் கொடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.
மேலும், மெலிந்தா பொதுவெளியில் விவாகரத்து கோரினால், பில் கேட்ஸ் தொடங்கிய தொண்டு உறுதிமொழி (pledge programme) திட்டத்திற்கு பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் எனவும் அந்த மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய மிரட்டல் குற்றச்சாட்டுகள்
2017-ஆம் ஆண்டில், ரஷ்ய பாலம் (bridge) விளையாட்டு வீராங்கனை மிலா அன்டோனோவாவுடன் பில் கேட்ஸுக்கு இருந்ததாக கூறப்படும் உறவை வெளிப்படுத்துவதாக எப்ஸ்டீன் மிரட்டியதாக முன்பே செய்திகள் வெளியாகியிருந்தன. எப்ஸ்டீன் தொடங்கிய தொண்டு நிதியில் கேட்ஸ் பங்கேற்க மறுத்ததன் பின்னணியில் இந்த மிரட்டல் நடந்ததாக கூறப்படுகிறது.
பில் கேட்ஸ் மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் கடுமையாக மறுத்துள்ளார். “இந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. அபத்தமானவை.. எப்ஸ்டீன், பில் கேட்ஸுடன் தொடர்ச்சியான உறவு கிடைக்காததால், அவரை அவதூறு செய்ய முயன்றதையே இது காட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
பின்னணி தகவல்
முன்னதாக வெளியான ஆவணங்களில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பல முக்கிய தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. அதில் முன்னாள் அமெரிக்க அதிபர்கள் டொனால்ட் டிரம்ப், பில் கிளிண்டன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
பில் கேட்ஸ் மற்றும் மெலிந்தா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் 1994 முதல் 2021 வரை திருமண வாழ்க்கையில் இருந்தனர். விவாகரத்திற்கான காரணங்களில், கேட்ஸின் வெளிவிவாக உறவுகள் மற்றும் எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் காரணம் என மெலிந்தா முன்பே கூறியிருந்தார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை பாலியல் கடத்தலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் உயிரிழந்தார். அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக தற்கொலை என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..



