சென்னையின் அடையாறு பகுதியில் கடந்த மாதம் அடுத்தடுத்து காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயிரிழந்த காகங்களின் உடல்கள் உடனடியாக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர்தர விலங்கு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பரிசோதனையில், அந்த காகங்கள் ‘H5N1’ எனப்படும் அதிதீவிர பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலைத் தொடர்ந்து, தமிழக அரசு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், சேலம், நாகப்பட்டினம், மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காகங்கள் உயிரிழப்பு கண்டறியப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) கருதப்பட்டு தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவை அனைத்தும் முறையான வழிகாட்டுதல்களுடன் ஆழமான குழிகளில் புதைக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கேரளா மற்றும் ஆந்திராவின் சித்தூர் மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள 26 சோதனைச் சாவடிகளிலும், ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களிலும் கிருமிநாசினி தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. காகங்கள் ஓரிடத்தில் மட்டும் தங்குபவை அல்ல என்பதால், இந்த வைரஸ் மற்ற பறவைகளுக்கும், முக்கியமாக கோழிப்பண்ணைகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் அம்ரித் கூறுகையில், “தற்போது கண்டறியப்பட்டுள்ள H5N1 வைரஸ் மனிதர்களுக்குப் பரவியதாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக கோழி இறைச்சியை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இறந்த பறவைகளை நேரடியாக கைகளால் தொடாமல், உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.



