மருத்துவ உலகில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லாக, ரத்தப் புற்றுநோய் (Leukemia) உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் அறிகுறிகளைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் மிக நுட்பமான மாற்றங்களைக் கூட துல்லியமாகக் கண்டறியும் இந்த முறை, புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, ரத்தப் புற்றுநோய் தீவிரம் அடைந்த பின்னரே அதன் அறிகுறிகள் வெளியே தெரியும் என்பதால், ஆரம்பக்கட்டத்திலேயே அதைக் கண்டறிந்து தடுப்பது சவாலான காரியமாக இருந்து வந்தது.
நமது எலும்புகளின் மையப்பகுதியில் உள்ள எலும்பு மஜ்ஜை (Bone Marrow) தான் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் ரத்தத் தட்டுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக செயல்படுகிறது. இங்கு ஏற்படும் சிறு கோளாறுகள் ரத்த சோகை முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகின்றன. ஆராய்ச்சியாளர்களின் இந்தப் புதிய மூலக்கூறு விவரக் கண்டறிதல் தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட மரபணு ஆய்வுகள் மூலம் ஆய்வக சோதனைகளில் கூடத் தெரியாத நுட்பமான மாறுதல்களை முன்கூட்டியே வெளிச்சத்திற்குக் கொண்டு வரும். இதன் மூலம், நோய் முற்றிப் போவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ‘சயின்ஸ்டெக் டெய்லி’ இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
உடலின் இணைப்பு திசு செல்களுக்கும் நோயெதிர்ப்பு செல்களுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு நோயாக மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்வது, வருங்காலப் புற்றுநோய் தடுப்பு சிகிச்சைகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும். அதே வேளையில், தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நமது வாழ்வியலில் மேற்கொள்ளும் மாற்றங்களே எலும்பு மஜ்ஜையைப் பாதுகாக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இரும்புச் சத்து, புரதம், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பி12 நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்வதும், மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பதும் மிக அவசியமாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, மன அழுத்தமற்ற சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இந்த ரத்த உற்பத்தி தொழிற்சாலையை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.



