சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர், பிரிண்டர் மற்றும் ஜெராக்ஸ் எந்திரங்களுக்கு மை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வெளியே சென்ற சுரேஷ், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷை தேடி வந்தனர். ‘அப்பொழுது மனைவி வீட்டில் இருந்த உடைமைகளை பரிசோதனை செய்த பொழுது சுரேஷ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தில், நான் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல லட்சம் இழந்துவிட்டேன். வாழத் தகுதியற்ற நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன், நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள், இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் நான் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியிருந்தது. தொடர் விசாரணையில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சம் இழந்தது தெரியவந்தது.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் ஆண் சடலம் கரை ஒதுங்கியது. காவல்துறையினர், சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அது மாயமான சுரேஷ் என்பதும், அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி மூலம் ரூ.16 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அதிக அளவு கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.