இன்று (நவம்பர் 1) அதிகாலை, ஜெத்தா (சவூதி அரேபியா) – ஹைதராபாத் இடையே பறந்த இண்டிகோ விமானம் 6E 68-இல் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் முழுமையான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 185 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் காலை 7.30 மணியளவில் மும்பை நோக்கி திருப்பி விடப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் (ATC) உடனடியாக அவசர நடைமுறைகளை செயல்படுத்தி, அனைத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுக்களையும் எச்சரித்தது.
மும்பையில் பாதுகாப்பான தரையிறக்கம்
அந்த விமானம் 7.32 மணிக்கு முழுமையான அவசரநிலை அறிவித்தது. ATC அதிகாரப்பூர்வமாக “அவசர நிலையின் காரணம்: குண்டு மிரட்டல்” என உறுதிப்படுத்தியது. மும்பை விமான நிலையத்தின் முக்கிய மற்றும் துணை தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் (CFT-5, CFT-8, CFT-9) அனுப்பப்பட்டன. கட்டளை நிலையங்கள் அமைக்கப்பட்டு, கூடுதல் தீயணைப்பு வாகனங்களும் தயாராக வைக்கப்பட்டன.
காலை 8.24 மணிக்கு, இன்டிகோ விமானம் ரன்வே 27-இல் பாதுகாப்பாக தரையிறங்கியது. அவசர வாகனங்கள் உடனே விமானத்துடன் இணைந்து பின்தொடர்ந்தன. அதன் பிறகு, விமானம் E9 டாக்ஸிவேயில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் விரிவான சோதனைக்காக நிறுத்தப்பட்டது.
தீவிர விசாரணை
விமான நிலையத்தின் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் இணைந்து மேற்கொண்ட விரிவான ஆய்வுக்குப் பிறகு, அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ATC முறையாக 11.38 மணிக்கு அவசரநிலையை வாபஸ் பெற்றது. அனைத்து அவசர சேவை வாகனங்களும் 11.56 மணிக்குள் தங்களது நிலையங்களுக்கு திரும்பின.
இன்டிகோ நிறுவனத்தின் விளக்கம்
இன்டிகோ செய்தி தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில் “2025 நவம்பர் 1 அன்று ஜெத்தாவிலிருந்து ஹைதராபாத் பறந்த இன்டிகோ விமானம் 6E 68 மீது பாதுகாப்பு மிரட்டல் கிடைத்தது. விதிமுறைகளின்படி, மும்பை நோக்கி திருப்பி விடப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டன. பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு பானங்கள் மற்றும் தகவல்கள் வழங்கப்பட்டன. எப்போதும் போல, பயணிகள், குழுவினர் மற்றும் விமானத்தின் பாதுகாப்பே எங்களின் முதன்மை முன்னுரிமையாகும்.”
தொடரும் விசாரணை
வெடி குண்டு மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து இதுகுறித்து பணியாற்றி வருகின்றன. மும்பை விமான நிலையமும் இன்டிகோ நிறுவனமும், அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டதால் எந்த பயணிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளன.
Read More : ஒரே எண்ட்ரி.. வந்ததோ 15,000 பேர்.. ஆந்திர கோவில் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்?



