வட அமெரிக்காவில் வீசும் பனிப் புயலால் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 25 கோடி பேர் பனிப்பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதுவரை 31 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான கிறிஸ்துமஸ் குளிர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் கோடிக்கணக்கானவர்களின் பயணம் தடைபட்டுள்ளது. சுமார் 20 கோடி மக்களுக்கும் மேல் வாழும், பாதிக்கும் மேலான அமெரிக்க மாகாணங்களுக்கு தீவிர வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. டெக்சாஸ் முதல் க்விபெக் வரையில் சுமார் 3,200 கி.மீ. வரையிலும் பனிப்புயல் வீசுகிறது. வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் எழுந்த பனிப்புயல், அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள ஏரிகளை உறையச் செய்துள்ளது.
