2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது..
இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 274க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து ரூ. 2,74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..



