அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று மாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் ஆகிய இடங்களிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்த மிரட்டல் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை மாநகர போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் இன்று காலை வெடிகுண்டு நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் அவரின் வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தற்போது 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் சென்னை கிரீன்வே சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும், சேலத்தில் உள்ள அவரின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பை இசட் பிளஸ் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.