மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து நெல்லை நோக்கிப் பயணித்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, மதுரை கொட்டாம்பட்டி அடுத்துள்ள பள்ளப்பட்டி பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாகச் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பின்னால் அசுர வேகத்தில் வந்த மற்றொரு ஆம்னி பேருந்து, எதிர்பாராதவிதமாக நின்றிருந்த பேருந்தின் பின்புறம் பலமாக மோதியது.
நொடிப் பொழுதில் நடந்த இந்த மோதலில், நின்றிருந்த பேருந்தின் பின்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பின்னால் வந்த பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா அல்லது அதிகாலை நேர தூக்க கலக்கத்தால் விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



