மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கே.ஒய்.சி. மற்றும் பான் விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட அந்த இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதனை நம்பிய வாடிக்கையாளர்களும் லிங்கை கிளிக் செய்ய, அடுத்தக் கணமே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது போல் குறுஞ்செய்திகள் வந்துள்ளது. 3 நாட்களுக்குள் லட்சக்கணக்கான ரூபாய் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் குவிந்த நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, இந்த ஆன்லைன் மோசடியில் பிரபல நடிகை நக்மா சிக்கி ரூ.1 லட்சம் பணத்தை இழந்திருக்கும் தகவல் வெளியானது. இதுகுறித்து நக்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நக்மாவின் செல்போனுக்கு வங்கியின் கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு ஒரு மெசேஜ் லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை க்ளிக் செய்தபோது, அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், வங்கியிலிருந்து பேசுவதாகவும், கே.ஒய்.சி விவரங்களை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே மோசடிப் பேர்வழி நக்மாவின் போனை அவரது கட்டுப்பாட்டில் எடுத்து, அவரது இன்டர்நெட் பேங்கிங் கணக்கைத் திறந்து அதிலிருந்து 99,998 ரூபாயை வேறு ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டார். அந்த நபரிடம் நக்மா எந்த விவரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும், பணம் பறிபோனதாக நக்மா தெரிவித்துள்ளார்.
நக்மாவின் போனுக்கு 20-க்கும் மேற்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டுகள் வந்துள்ளது. அந்த எண்களை தான் பகிரவில்லை என்று புகாரில் கூறியுள்ளார். இதனால் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அவர்களால் பணத்தை எடுக்க முடியவில்லை என்றும் நக்மா விளக்கமளித்துள்ளார். குறிப்பிட்ட தனியார் வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடந்து வருகிறது. பொதுமக்கள் இந்த விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும் என்றும், வங்கிகள் ஒருபோதும் ஒன் டைம் பாஸ்வேர்டு கேட்பதில்லை என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.