தங்கப்புதையல் கிடைத்துள்ளதாக கூறிய நபர் குறைந்த விலையில் தருவதாக மளிகை கடை உரிமையாளரை 10 லட்சம் ரூபாய் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது..
கோவை கருமத்தம்பட்டி அருகே வாகராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் இவர் மளிகை கடை நடத்துகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் அறிமுகமானார். அவர் தான் கட்டிட வேலை செய்வதாக கூறி சதாசிவத்தின் மளிகை கடையில் அரிசி , பருப்பு போன்ற பொருட்கள் வாங்கிச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் இடத்தில் அஸ்திவாரம் தோண்டியபோது தங்கப்புதையல் கிடைத்ததாக கூறி ஒரு செயினை கொடுத்துள்ளார். அந்த நகை தங்கமா என பார்த்து கூறுங்கள் என கேட்டுள்ளார். அதை நகைக் கடையில் கொண்டு சென்று சோதனை செய்ததில் அந்த நபர் புதையல் எனக் கொடுத்தது தங்கம் என தெரியவந்தது. இதனால் வாயடைத்து போனார் சதாசிவம். மேலும் மொத்தம் ஒரு கிலோ தங்கம் இருக்கும்.. ரூ.40 லட்சம் விலை போகும் இதை வைத்துக் கொண்டு ரூ.10 லட்சம் கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார். இதை நம்பி 10 லட்சம் ரூபாயைக் கொடுத்து அந்த தங்க செயினை வாங்கினார்.
இந்நிலையில் பல நாட்கள் கழிந்த பின்னர் அந்த செயின் நிறம் மாறத் தொடங்கியது. அதை கடையில் கொண்டு சென்று மீண்டும் சோதனை செய்தார். அப்போது இவை பித்தளை, தங்கம் அல்ல என தெரிவித்துள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என நினைத்து உடைந்து போனார்.
இது குறித்து கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் , அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.