குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கார்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒன்பது நாட்கள் நடக்கும் நவராத்திரி திருவிழா தான் வட மாநிலங்களில் துர்கா பூஜை என சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குஜராத், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் நாம் கொண்டாடும் நவராத்திரியை துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். துர்கா பூஜையின் போது ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் அமைக்கப்பட்டு துர்க்கை அம்மன் சிலை நிறுவப்படும். மேலும் மாலை நேரத்தில் மண் விளக்குகளால் தீபம் ஏற்றி பாரம்பரிய நடனமான கார்பா சிறப்பு நடனம் ஆடுவது வழக்கம். கர்பா நடனத்தை பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.
நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்க்காதேவியை மையமாக வைத்து, ஒன்பது சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். வட மாநிலங்களில் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும் முக்கியமாக, குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் புகழ் பெற்றது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் உயிரிழந்த 10 பேரும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நவராத்திரி தொடங்கிய முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடியபோது 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்கியது முதல் 6 நாட்களில் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்ஸ்க்கு 521 அழைப்புகள் வந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.