பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சென்னை மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது முறையாக சென்னை பட்ஜெட்டை மேயர் பிரியா வாசித்தார். இதில் புதிதாக 80-க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்2 முடித்து, NEET, JEE, CLAT போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்லும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கண்டனத்தை மாநகராட்சி நிர்வாகமே செலுத்தும்.
பிளஸ்2 பொதுத்தேர்வில், ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அவர்கள் ஐஐடி மெட்ராஸ், ஐஐஎம் பெங்களூர், டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். மேலும், அவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும். பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு முன், சிறு தீனி வழங்கப்படும்.
இவ்வாறான புதிய பல திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை சென்னை மேயர் பிரியா பட்ஜெட் உரையில் அறிவித்தார். மேலும், சென்னையில் நகர்ப்புற சுகாதார மையங்கள், திடக்கழிவு மேலாண்மை, முதியவர்கள் வரி செலுத்த ஆன்லைன் முறை, தூய்மைப் பணியை கண்காணிக்க சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்துதல், பூங்காக்களை பராமரிக்க புதிய நடைமுறை போன்ற அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளது.