ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த உண்டியல் 15 நாட்களுக்கு ஒருமுறை கோயில் நிர்வாகத்தால் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று வழக்கம் போல் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்த காசுகள் எண்ணப்பட்டது.
அப்போது, அதிலிருந்த ஒரு காசோலையை பார்த்து ஆச்சரியமடைந்த அவர்கள், அதில் ரூ.100 கோடி என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த காசோலையில் வராஹ லக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம் என்றும் எழுதப்பட்டிருந்தது. முதலில் அந்த காசோலையில் ரூ.10 என எழுதப்பட்டுள்ளது. பின்னர், அது அழிக்கப்பட்டு, ரூ.100 கோடி என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் கோயில் நிர்வாகத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, இந்த காசோலையின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், பொட்டேபள்ளி ராதா கிருஷ்ணாவின் வங்கிக் கணக்கு காசோலை என்பது தெரியவந்தது. மேலும் அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து முழுமையான விவரங்களை எடுக்க கோயில் தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.