வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 16, 17ஆம் தேதி பெய்த கனமழை தென் தமிழகத்தை புரட்டிப் போட்டது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் அடைக்கலம் புகும் அளவிற்கு அவர்களது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. தற்போது வரை அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி – நெல்லை – கன்னியாகுமரி – தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் வழங்கியதாகவும், அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.