500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் கிடையாது என்ற குறுஞ்செய்தி பரவி வரும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
சமீபத்தில் பரவிய குருஞ்செய்தியில், வீட்டு உபயோகத்திற்கு 500 யூனிட்டுகள் (2 மாதங்களுக்கு) மேல் மின்சாரம் பயன்படுத்தினால், 100 யூனிட் இலவசம் இல்லை என்ற தகவல் வந்தது. அதில் 2 மாதங்களுக்கு சுமார் 510 யூனிட் உபயோகித்தால், வீட்டு உபயோகத்திற்கு சுமார் 2030 ரூபாய் மின்சார கட்டணம் ஆகும் என்ற தகவல் இருந்தது. இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், அந்த போலி செய்தியை பகிர்ந்த தமிழ்நாடு மின்சார வாரியம், “இந்த குறுஞ்செய்தி பரவி வருகிறது. இது முற்றிலும் போலி. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்” என விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 500 யூனிட்டுகள் வரை உபயோகித்தால், புதிய கட்டணத்தில் ரூபாய் 595 வரை விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.