தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”எனக்கும் விவேக்ராஜ் என்பவருக்கும் திருமணம் ஆகி சேர்ந்து வாழ்ந்தோம். எனது கணவரின் செல்போனை பார்த்த போது அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன்ஷாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் படங்களை வைத்திருந்தார். தனது கணவர் வங்கியில் வேலை பார்ப்பதால் அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் பேசி சுமார் 500 முதல் 1,000 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.
இதைப் பற்றி தனது கணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் இதைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னை
மிரட்டினர். மேலும், தன்னை 2 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் அடித்து துன்புறுத்தியதால் கரு சிசுவிலேயே கலைந்துவிட்டது. இது தொடர்பாக தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், எனது கணவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது தஞ்சை மகளிர் போலீசார் உரிய விசாரணை நடத்த வாய்ப்பில்லாததால் அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும். அதோடு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சுகுமார குரூப் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி தரப்பு காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.