மெக்சிகோ தேசத்தில் ’ஏலியன்களின் சடலங்கள்’ என்று முன்வைக்கப்பட்டவை குறித்து ஆராய்வதில் அமெரிக்காவின் நாசா முக்கிய முடிவு எடுத்துள்ளது.
மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஏலியன் ஆய்வாளருமான ஜெய்ம் மௌசன் என்பவர், செவ்வாயன்று மெக்ஸிகோ காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் பதப்படுத்தப்பட்ட இரு ஏலியன் சடலங்களை காண்பித்தார். அளவில் சிறியதாகவும், கைகளில் 3 விரல்களுடனும், தலையின் பின்பகுதி பெரியதாகவும் தென்பட்ட அந்த உடல்கள், சர்வதேச கவனத்தை ஈர்த்தன. பரிசோதனையில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றும் மௌசன் விளக்கினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பெரு நாட்டின் நாஸ்கா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்டதாக அந்த உடல்களின் பின்னணி குறித்து அவர் தெரிவித்தார். மெக்சிகோ தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அந்த ஏலியன்களின் உடல்களில் முட்டைகள் இருந்ததை கண்டறிந்ததாகவும் கூறினார். அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் யுஎஃப்ஓ எனப்படும் வானில் தட்டுப்படும் ஏலியன்களின் விண்வெளி கலம் முதல் ஏலியன்களின் நடமாட்டம் வரை பல்வேறு கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன.
8 வருடங்களுக்கு முன்னரும் இதே போன்று பெரு தேசத்திலிருந்து ஏலியன் உடல் என்ற பெயரில் மௌசன் சமர்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆய்வில் அது ஒரு மனித குழந்தையின் மம்மியாக்கப்பட்ட உடல் என்று தெரியவந்ததால், பின்னர் அது நிராகரிக்கப்பட்டது. எனினும், இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் தவிர்த்து, உயிரினங்கள் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்தே வருகிறது. இதர கோள்கள் மட்டுமன்றி அவை குறித்து புவியின் பரப்பிலும் ஆராயப்பட்டு வருகின்றன.
அவற்றில் ஒன்றாக மெக்சிகோ ஏலியன் உடல்களும் பரபரப்பை உருவாக்கின. எனவே, ஏலியன்கள் மற்றும் யுஎஃப்ஓ குறித்து நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என பல தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றை செவிமெடுத்த நாசா, ’அடையாளம் தெரியாத அசாதாரண நிகழ்வுகளை’ ஆராயும் யுஏபி ஆய்வு இயக்குநரை நியமிப்பதாக அறிவித்தது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் துறையின் முன்னாள் தலைவரும், யுஏபி அறிக்கையின் தலைவருமான டேவிட் ஸ்பெர்கல், ’மெக்சிகோ ஏலியன் மாதிரிகள் என சொல்லப்படுபவை குறித்து வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்தி உள்ளார். அதன் மூலம் அவை குறித்த ஆய்வினை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.